செய்திகள்
கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத10,103 பேருக்கு ரூ.22¾ லட்சம் அபராதம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத 10 ஆயிரத்து 103 பேருக்கு ரூ.22¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத 10 ஆயிரத்து 103 பேருக்கு ரூ.22¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகையாக தலா ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு தலா ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுள்ள கட்டுப்பாட்டு பகுதியை மீறி வெளியே சென்றவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைப்புகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத 10 ஆயிரத்து 103 பேரிடம் இருந்து இதுவரை ரூ.22 லட்சத்து 77 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.