செய்திகள்
கோப்புபடம்

வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

Published On 2020-11-16 14:17 IST   |   Update On 2020-11-16 14:17:00 IST
தீபாவளியையொட்டி 2 நாட்களில் வேலூர், அரக்கோணம் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.16 கோடியே 7 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என்று 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகளும் உள்ளன.

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது, பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டன. கடந்த 13-ந் தேதி மாலை மற்றும் நேற்று முன்தினம் மதியம் முதல் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர். அதனால் வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் மதுபானங்கள் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்தது.

வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 13-ந் தேதி ரூ.4 கோடியே 55 லட்சத்துக்கும், நேற்று முன்தினம் ரூ.5 கோடியே 12 லட்சத்துக்கும் என்று 2 நாட்களில் ரூ.9 கோடியே 67 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. இதேபோன்று அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் தலா ரூ.3 கோடியே 20 லட்சம் என்று 2 நாட்களில் ரூ.6 கோடியே 40 லட்சத்துக்கு மது, பீர் வகைகள் விற்பனையானது.

வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.16 கோடியே 7 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. கடந்தாண்டு தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ.13 கோடியே 10 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. அதனை விட இந்தாண்டு ரூ.3 கோடிக்கு அதிகமாக விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News