செய்திகள்
பெண்ணாடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
பெண்ணாடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் பகுதியில் கடந்த மாதம் 10-க்கும் மேற்பட்ட கோவில்களின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணாடம் சோழநகரை சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன்(வயது 18), ராஜேந்திரன் மகன் கதிர்(19), சீனிவாசன் மகன் கார்த்திகேயன்(25), கணேசன் மகன் கார்த்திக்(18), தாதன் குட்டை தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார்(19), சூரியமூர்த்தி ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அகிலன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சூரியமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சூரியமூர்த்தியை(25) நேற்று தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.