செய்திகள்
மணப்பாக்கம் அருகே என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
மணப்பாக்கம் அருகே என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர்(வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், நந்தம்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கு இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.