செய்திகள்
விபத்தில் சேதமடைந்த காரை படத்தில் காணலாம்.

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதல்- 2 பேர் பலி

Published On 2020-10-24 09:59 GMT   |   Update On 2020-10-24 09:59 GMT
வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேப்பூர்:

மதுரை ஆத்திக்குளம் இந்தியன் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 33). இவரது மாமனார் ரத்தினசேகர் (60), மாமியார் தனசெல்வி (55). இவர்கள் 3 பேரும் சொந்த வேலை காரணமாக நேற்று காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை ராஜாமுகமது ஓட்டினார். கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் ராஜாமுகமதுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி முன்னாள் சென்ற லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி ராஜாமுகமது, தனசெல்வி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரத்தினசேகர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்தினசேகரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜாமுகமது, தனசெல்வி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News