செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கீழ்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ஜெயம்மா(வயது 73). இவர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்சோமார்பேட்டை கூட்ரோடு அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் இபிரிபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (40). தொழிலாளி. இவர் ஓசூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சீதாராம்மேட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மோகன்ராஜ் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.