செய்திகள்
சிவக்குமார்

செம்பனார்கோவில் அருகே குடும்பத்தகராறில் அரிவாள்மனையால் மனைவியை வெட்டிக்கொன்ற விவசாயி கைது

Published On 2020-09-27 07:25 GMT   |   Update On 2020-09-27 07:25 GMT
செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு:

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள பாகசாலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆலவேலி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 40). விவசாயியான இவருடைய மனைவி உமாராணி(35). இவர், மகளிர் குழுவில் கடன் வாங்கி வீட்டு செலவுக்கு பயன்படுத்தினார். சம்பவத்தன்று சிவக்குமார் தனது மனைவி உமாராணியிடம் செலவுக்கு பணம் கேட்டார். அப்போது உமாராணி பணம் கொடுக்க மறுத்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மனைவி உமாராணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து பாகசாலை போலீசார் சிவக்குமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உமாராணி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாகசாலை போலீசார், முன்பு பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட உமாராணிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.
Tags:    

Similar News