செய்திகள்
அஞ்செட்டி அருகே பெண்ணை கொலை செய்து உடல் தீ வைத்து எரிப்பு
அஞ்செட்டி அருகே பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் உடலை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்ராம்பாளையம் அருகே உள்ளது பஞ்சல் துணை கிராமம். இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்த நபர்கள் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். நிர்வாண நிலையில் உடல் கிடந்தது. அதே போல அந்த பெண் அணிந்திருந்த காலணியும், அதன் அருகே பேப்பர்கள் சில தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? என தெரியவில்லை. அவர் தேன்கனிக்கோட்டை, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவராகவோ, அல்லது கர்நாடக மாநில எல்லைப்பகுதியை சேர்ந்தவராகவோ இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கர்நாடக மாநில பகுதியில் கொலை செய்து பெண்ணின் உடலை அஞ்செட்டி அருகே போட்டு விட்டு, உடலை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் இந்த பகுதியில் எந்த பெண்ணும் காணாமல் போய் இருக்கிறார்களா? வழக்கு எதுவும் பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அஞ்செட்டி அருகே பெண்ணை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.