செய்திகள்
கைது

மாணவியிடம் அத்துமீற முயற்சி- அரசு கல்லூரி பேராசிரியர் கைது

Published On 2020-09-10 09:20 IST   |   Update On 2020-09-10 09:20:00 IST
குடியாத்தத்தில் மாணவியிடம் அத்துமீற முயன்ற அரசு கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத் துறையில் பேராசிரியராக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் கூட்டாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், குடியாத்தம் டவுனில் வசிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை நேற்று முன்தினம் மாலை பாடம் சம்பந்தமாக அழைத்துள்ளார்.

அதை நம்பி அந்த மாணவி, பேராசிரியர் தங்கியிருக்கும் கல்லூரி அருகே காந்திநகர் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார் அப்போது பேராசிரியர் ரமேஷ் அந்த மாணவியிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

மாணவியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் மீது புகார் செய்தனர். அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Similar News