காங்கிரஸ்-தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள 739 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 35 மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் புதுவை கொரோனா பாதிப்பு அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் தேசிய இறப்பு விகிதம் 1.72 சதவீதத்தை தாண்டி, புதுவையில் இறப்பு விகிதம் 1.83 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் செயல்படாத தன்மையே காரணம். ஆளும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. கொடிய சூழ்நிலையிலும் கவர்னர், அரசு ஒருவர் மீது ஒருவர் குறை கூறி மலிவு விளம்பர அரசியல் நடத்தி மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
பரிசோதனையை அதிகப்படுத்தி ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட 3 மடங்கு நோயாளிகள் வீட்டிலேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் தங்கும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைக்கு தள்ளப்பட்டவுடன் நோயின் தாக்கம் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் மரணமடைந்து வருகிறார்கள்.
போதிய மருந்துகளும் அரசிடம் இருப்பு இல்லை. அரசின் அலட்சியத்தால் மரணமடைபவர்களின் ஆத்மா கூட கவர்னர், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசை மன்னிக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.