செய்திகள்
ஆசனூர் அருகே யானை தாக்கி பெண் பலி
ஆசனூர் அருகே யானை மிதித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன சரகத்திற்கு உட்பட்ட அட்டபாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன். விவசாயி.
இவரது மனைவி சாலம்மா (45). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். நேற்று இரவு சாலம்மா தனது தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தி வரும் பறவைகளை விரட்ட சென்றார்.
அப்போது அங்கு வந்த காட்டு யானை சாலம்மாவை மிதித்து கொன்றது. அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இது குறித்து ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு சாலம்மாவின் கணவர் சங்கரன் தகவல் அளித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். யானை மிதித்து பலியான சாலம்மா உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
யானை மிதித்து பெண் பலியான சம்பவம் ஆசனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.