செய்திகள்
காவிரி ஆற்றில் குதித்து நீந்தி வந்தவர்களை படத்தில் காணலாம்.

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்து நீந்தி வந்த வாலிபர்கள்

Published On 2020-09-06 18:18 GMT   |   Update On 2020-09-06 18:18 GMT
லாலாபேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்து நீந்தி வந்த வாலிபர்கள் தொட்டியம் போலீசாரிடம் சிக்கினர்.
லாலாபேட்டை:

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் காயத்திரி (வயது 26). இவர் தனது தாயார் செல்லம்மாள் (51) என்பவருடன் திருச்சியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டிலிருந்து ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது லாலாபேட்டை மேம்பாலம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் காயத்திரி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

தொடர்ந்து காயத்திரி அவர்களை விரட்டி சென்றபோது, அந்த மர்மநபர்கள் லாலாபேட்டை சுரங்கபாதையில் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து தப்பினர். இதுகுறித்து காயத்திரியின் தாய் செல்லம்மாள் லாலாபேட்டை போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து லாலாபேட்டை போலீசார் மர்மநபர்களை பிடிப்பதற்காக திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார், காவிரி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காவிரி ஆற்றில் 2 பேர் நீந்தி வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காயத்திரியிடம் நகையை பறித்து வந்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மொட்டையன் மகன் வடிவேல் (25), மற்றொருவர் தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (26) என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News