செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வரத்து அதிகரிப்பு

Published On 2020-09-02 19:20 IST   |   Update On 2020-09-02 19:20:00 IST
இ.பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை, கரூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.
ஈரோடு:

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையானது ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் வாரம்தோறும் நடைபெற்று வந்தது.

இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் கொள்முதல் செய்வார்கள்.

லுங்கி, வேட்டி, சேலை, பனியன் மற்றும் மஞ்சள் நிற சேலை, வேட்டி போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளி ரகங்கள் மலிவான விலையில் கிடைப்பதால் இந்த ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை தர அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறை, இ.பாஸ் முறை போன்ற காரணமாக வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வராமல் இருந்தனர். இதனால் ஜவுளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஜவுளி சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரை வியாபாரமாகும். பண்டிகை காலங்களில் 6 கோடி வரை வியாபாரம் நடைபெறும். கொரோனா காலகட்டத்தில் 10 சதவீதம் அளவு கூட ஜவுளி வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 17-ந் தேதி முதல் இ.பாஸ் முறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வரத் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று வியாபாரம் சூடு பிடித்தது.

இந்த மாதம் திருமண சீசன் என்பதால் ஜவுளி விற்பனை ஓரளவு நடந்து வருகிறது. தற்போது இ.பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை, கரூர் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். அதே நேரத்தில் வெளிமாநில வியாபாரிகள் இங்கு வர பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

இதனால் மொத்த வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறாமல் மந்த அளவில் உள்ளது. போகப்போக இதுவும் சரியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News