செய்திகள்
காரைக்காலில் ராட்சத அலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு
காரைக்காலில் கடற்கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது58) என்பவர், குடும்ப உணவுக்காக, நேற்று முன்தினம் கடற்கரையோரத்தில், வீச்சு வலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கரையை நோக்கி வேகமாக வந்த ராட்சத அலையில் ராஜேந்திரன் சிக்கி மாயமானார். இது குறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் ராஜேந்திரன் உடல், காளிகுப்பம் கடற்கரையோரத்தில் ஒதுங்கியது. இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.