செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

டாக்டர்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன்- கவர்னர் தகவல்

Published On 2020-08-16 11:26 IST   |   Update On 2020-08-16 11:26:00 IST
டாக்டர்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புவதாகவும், அவர்கள் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி உயர் அதிகாரிகளை கொண்ட பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை வைத்துள்ளார். அதன் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

சமீபத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் வார் ரூமுக்கு சென்ற கிரண்பேடி மருத்துவ அதிகாரிகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் பலர் கவர்னரின் வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறினார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

டாக்டர்கள் தங்களிடம் வரும் அதிக நோயாளிகளை கவனிப்பதால் பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் கேள்விப்படுகிறேன். உங்களுக்கு உதவியாக இருக்க நான் பலமுறை உங்களிடம் கருத்து கேட்கிறேன்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே பதில்களை பகிர்கிறார்கள். அவை உடனடியாக செயல்படுத்தப்படுகின்றன. உங்கள் நலனுக்காகத்தான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமானவற்றை நீங்கள் குழுவில் அனுப்ப முடியாவிட்டால் குழுவில் உள்ள தனது எண்ணுக்கு அனுப்புங்கள். அதற்கான 100 சதவீத ரகசியத்தன்மைக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்களது பிரச்சினைகளை அகற்றுவேன் அல்லது நிவர்த்தி செய்வேன். நீங்கள் பாதுகாப்பாக இருக்க நான் விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Similar News