செய்திகள்
விராலிமலை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள அவ்வையார்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு ஆவூர் அருகே உள்ள சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரிசங்கு என்கிற முருகையா (வயது 45) என்பவர் தோட்ட பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று மாலை அந்த தோட்டத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் உள்ள மின்மோட்டார் சுவிட்சை திரிசங்கு இயக்கினார். அப்போது மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் அருகே உள்ள மின்மாற்றியை பார்த்துள்ளார். அப்போது அதில் பியூஸ் போயிருந்தது. இதனால் திரிசங்கு மின்மாற்றியை நிறுத்திவிட்டு அதில் ஏறி பியூஸ் போட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நீர்பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.