செய்திகள்
தற்கொலை

ஆதம்பாக்கத்தில் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2020-08-11 03:30 IST   |   Update On 2020-08-11 03:30:00 IST
திருமணம் ஆன 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர், 12-வது தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மகள் அக்‌ஷயா(வயது 29). இவருக்கும், பெருங்களத்தூரைச்சேர்ந்த குருபிரசாத்(31) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

திருமணமான ஒரே மாதத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கணவருடன் கோபித்துக்கொண்டு அக்‌ஷயா ஆதம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

கணவன்-மனைவி இருவரையும் சமரசம் செய்து மீண்டும் சேர்த்து வைக்க அவரது பெற்றோர் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் அக்‌ஷயா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் எழுந்த அவரது பெற்றோர், தங்கள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆதம்பாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய அக்‌ஷயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வரதட்சணை கொடுமை காரணமாக அக்‌ஷயா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என அவருடைய கணவர் குருபிரசாத்திடம் விசாரித்து வருகின்றனர்.

அக்‌ஷயாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Similar News