செய்திகள்
கார் தீப்பற்றி எரிந்ததை படத்தில் காணலாம்.

அன்னவாசல் அருகே ஓடும் காரில் திடீர் தீ: 3 பேர் உயிர் தப்பினர்

Published On 2020-08-09 07:22 GMT   |   Update On 2020-08-09 07:22 GMT
அன்னவாசல் அருகே ஓடும் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் உமர்(வயது 32). இவர் தனது உறவினர்கள் சகிலாபானு(40), முகமதுரசீது(14) ஆகியோருடன் புதுக்கோட்டைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். காரை உமர் ஓட்டினார். அந்த கார் அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை கண்ட உமர் காரை நடுரோட்டில் உடனடியாக நிறுத்தினார். ஏதோ அசம்பாவித சம்பவம் நடைபெறுவதை அறிந்த 3 பேரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். இதனையடுத்து கார் தீப்பற்றி எரிந்தது. 3 பேரும் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்.

கரும்புகையுடன் கார் எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் தீப்பிடித்த சம்பவம் எதிரொலியாக, அந்த சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்றது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News