செய்திகள்
குன்றத்தூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
குன்றத்தூரில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது குன்றத்தூர் முருகன் கோவில் பின்பகுதியில் உள்ள குளத்தின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் குன்றத்தூர், மணிகண்டன் நகரைச் சேர்ந்த நாகு என்ற நாகராஜ் (வயது 21), கார்த்திக் (37) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.