செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய தி.மு.க. கவுன்சிலர் உள்பட 17 பேர் கைது

Published On 2020-08-06 12:26 IST   |   Update On 2020-08-06 12:26:00 IST
கோட்டைப்பட்டினம் அருகே பணம் வைத்து சூதாடிய 17 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.13¾ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக சூதாட்ட கிளப் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீமிசல் அருகே பொன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகடவாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த தென்னந்தோப்பிற்கு சென்று அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர், அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளருமான பொன்பேத்தி சுந்தரபாண்டியன், பஷீர்அகமது, வெங்கடேசன், முத்து, பக்ருதீன், பாலு, செந்தில்வேல், விஜயகுமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் சூதாட வைத்திருந்த ரூ.13 லட்சத்து 62 ஆயிரத்து, 780-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கோட்டைப்பட்டினம் அருகே பணம் வைத்து சூதாடிய 17 பேர் பிடிப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News