செய்திகள்
கோப்புபடம்

சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

Published On 2020-08-04 13:51 IST   |   Update On 2020-08-04 13:51:00 IST
ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகையை 2 முறை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக நகராட்சி ஆணையருக்கு புகார்கள் சென்றன. 

இது தொடர்பாக அப்போதைய நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா விசாரணை நடத்தினார். இதில் நகராட்சியில் பணிபுரியும் நிர்வாக உதவியாளர் (பொறுப்பு) காசாளர் கனிமொழி, இளநிலை உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் தார் சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகையை 2 முறை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, அறிக்கை தயார் செய்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி நிர்வாக உதவியாளர் கனிமொழி, இளநிலை உதவியாளர் அசோக்குமார் ஆகியோரை நேற்று நகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு ஆணையை புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆணையர் அஜிதா பர்வீனிடம், நகராட்சி ஊழியர்கள் வழங்கினர்.

மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலுவைத்தொகையில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News