செய்திகள்
உப்பளம் தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்- திமுக கோரிக்கை
உப்பளம் தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரிடம் மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி அளித்துள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உப்பளம் தொகுதியில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. யாருக்கு தொற்று இருக்கிறது? இல்லை என்பது தெரியாமல் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே கொரோனா தொற்று மருத்துவ முகாம் நடத்தி, மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை தவிர்க்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வீடு வீடாக ஓமியோபதி மாத்திரைகள் வழங்கவேண்டும். மேலும் தொகுதியில் உள்ள மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு குறிப்பாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.