செய்திகள்
அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதித்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2020-07-15 09:33 GMT   |   Update On 2020-07-15 09:33 GMT
கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதித்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அறந்தாங்கி தாலுகாவில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு முதியவர் பரிசோதனை முடிவு வரும் முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் மீதம் உள்ள 18 பேரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டுக்கு அருகே சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் குழந்தைகள் வார்டில் உள்ள பெண்கள் அச்சம் அடைந்தனர். மேலும் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனை நுழைவுவாயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறந்தாங்கி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், கோட்டாட்சியர் கிருஷ்ணன், தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, 18 பேரும் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே அறந்தாங்கி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக விக்னேசபுரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியையும், கல்லனேந்தலில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியையும் அறந்தாங்கி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரவி, கோட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அரசு பாலிடெக்னிக்கை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News