செய்திகள்
திமுக

கொரோனா பாதிப்பு விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும்- திமுக வலியுறுத்தல்

Published On 2020-07-05 10:27 GMT   |   Update On 2020-07-05 10:27 GMT
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:

மயிலாடுதுறை தொகுதி ராமலிங்கம் எம்.பி., மதிவாணன் எம்.எல்.ஏ., நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் விவரம், கொரோனா வைரஸ் பணியில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தொடர்பான விவரங்களை தினந்தோறும் சென்னையில் வெளியிடுவது போல் நாகை மாவட்டத்திலும் முழுமையாக தெரிவிக்க வேண்டும். வைரஸ் தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்ய செல்பவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் தனிமைப்படுத்தும் நிலை உள்ளது. இதை மாற்றம் செய்ய வேண்டும்.

நாகை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளது? என்பது குறித்த முழு தகவல்களையும் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தி.மு.க. தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News