செய்திகள்
சிவகங்கையில் காரில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்களை படத்தில் காணலாம்.

சிவகங்கையில் காரில் துப்பாக்கியுடன் வந்த 5 பேர் சிக்கினர்

Published On 2020-06-23 19:05 IST   |   Update On 2020-06-23 19:05:00 IST
சிவகங்கையில் போலீஸ் சோதனையின் போது காரில் துப்பாக்கியுடன் வந்த 5 பேர் சிக்கினர்.
சிவகங்கை:

சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது சிவகங்கை வாணியங்குடி சாலையில் வந்த கார் ஒன்றை நிறுத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் இறங்கி தப்பி ஓடினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில் 2 நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த மதுரையை சேர்ந்த பாலகணேசன் (வயது37), பிரபாகரன் (27), சண்முகராஜன் (32), சிவகங்கையை சேர்ந்த அலிமுகமது (26), பாலகுரு (28) ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி அனுமதி பெற்றது என்றும் அவர்கள் இரவில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து கார், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து கார், துப்பாக்கிகளுடன் அவர்களை, நகர் இன்ஸ்பெக்டர் மோகன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News