செய்திகள்
கொரோனா வைரஸ்

சிவகங்கை, விருதுநகரில் 41 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி

Published On 2020-06-23 12:56 IST   |   Update On 2020-06-23 12:56:00 IST
சிவகங்கையில் 19 பேருக்கும், விருதுநகரில் 22 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கையில் ஒருவர் பலியானார்.
சிவகங்கை:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஒரு பெண், சிவகங்கை மாவட்டம் கல்லலில் ஒரு ஆண், ஒரு பெண், பனையம்பட்டியில் ஒரு பெண், திருப்பத்தூரில் ஒரு ஆண், ஒரு பெண், அதிராம்பேட்டையில் ஒரு ஆண், தேவகோட்டையில் 2 பெண்கள், மேலமாகானத்தில் ஒரு ஆண், சிறியூரில் ஒரு ஆண், காளையார் கோவிலில் ஒரு ஆண், சிவகங்கை காஞ்சிரங்காலில் ஒரு ஆண் உள்பட மொத்தம் 19 பேருக்கு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கையை அடுத்த ஜமீன்தார் பட்டியை சேர்ந்த 49 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. இவர் சென்னையில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 20-ந் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,552 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. 1,600 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவில்லை. 138 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 9 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 328 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராஜபாளையம் பெரியகடை வீதியை சேர்ந்த 35 வயது பெண், 23 வயது நபர், கூனம்பட்டியை சேர்ந்த 55 வயது பெண், 33 வயது நபர், 4 வயது பெண் குழந்தை, பூலாங்காலை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த 39 வயது நபர், வத்திராயிருப்பை சேர்ந்த 21 வயது பெண், சித்துராஜபுரத்தை சேர்ந்த 42 வயது பெண், விளாம்பட்டி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்த 36 வயது நபர், 32 வயது மனைவி, 3 வயது பெண் குழந்தை, 62 வயது மூதாட்டி, 3 வயது ஆண் குழந்தை, அருப்புக்கோட்டையை சேர்ந்த 33 வயது நபர், பெரிய வள்ளிகுளத்தை சேர்ந்த 57 வயது நபர், சிவகாசி வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த 31 வயது நபர், விருதுநகர் கோட்டூர் 30 வயது நபர் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதலால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு இந்த மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News