செய்திகள்
பணம் கொள்ளை

விருத்தாசலம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2020-05-31 14:13 GMT   |   Update On 2020-05-31 14:13 GMT
விருத்தாசலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுபாக்கம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி அருள் (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அருள் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள் தனது குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் தூங்கச்சென்றார். பின்னர் நேற்று காலை அருள், எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, துணிமணிகள் அனைத்து சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள் தனது குழந்தைகளுடன் வீட்டின் மாடிக்கு தூங்க சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் வந்து, வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags:    

Similar News