செய்திகள்
வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர் தமிழரசன்

மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்

Published On 2020-05-23 13:51 GMT   |   Update On 2020-05-23 13:51 GMT
திருச்சிற்றம்பலம் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.
திருச்சிற்றம்பலம்:

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் விடுமுறையில் உள்ளன. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து பொதுத்தேர்வை எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 25 மாணவர்கள் எழுத உள்ளனர். இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தமிழரசன், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது பெற்றோர்களுடன் கலந்து பேசி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்குவதுடன் அவர்களுக்கு பாடங்களையும் நடத்தி வருகிறார்.

இதனால் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர் கொள்ள தயாராகி வருகின்றனர். இவை தவிர ஏனாதி கரம்பை மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் பணியிலும் தமிழரசன் ஈடுபட்டுள்ளார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த தன்னலமற்ற சேவையினை அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
Tags:    

Similar News