செய்திகள்
மரவள்ளி கிழங்கு

ஊரடங்கு உத்தரவால் மரவள்ளி கிழங்குகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

Published On 2020-04-22 16:39 IST   |   Update On 2020-04-22 16:39:00 IST
வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்குகள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிணற்று பாசனம் மூலம் பணப்பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக மஞ்சள், கரும்பு, மரவள்ளி கிழங்கு போன்ற நீண்ட கால பயிர்களை செய்து வருகின்றனர்.

இந்த பயிரானது சுமார் 10 மாதம் நீர் பாசனம் செய்து பின்னர் அறுவடைக்கு வரும். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்குகள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் 10 மாதத்தில் அறுவடை செய்து அனுப்பினால் மட்டுமே கிழங்கின் தரம் நன்றாக (மாவுச்சத்து) இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாக மரவள்ளி கிழங்குகளை வெட்டி விற்பனைக்கு ஏற்றிவிட முடியாமல் விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சாதாரணமாக வியாபாரிகள் விவசாயிகளை தேடி வந்து கொள்முதல் செய்து கொண்டு செல்வார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வராமல் உள்ளனர். இதனால் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Similar News