செய்திகள்
வீடு இல்லாமல் சுற்றித்திரிந்த 80 தொழிலாளர்கள் மாநகராட்சி பள்ளியில் தங்க வைப்பு
கோவையில் வீடு இல்லாமல் சுற்றித்திரிந்த தொழிலாளர்கள் 80 பேரும் கோவை வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
கோவை:
கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றி வந்த சமையல் மாஸ்டர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவினால் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதனால் சாலைகளில் சுற்றித்திரிந்த அவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த காப்பகத்தில் இருந்த 80 தொழிலாளர்களையும் 2 லாரிகளில் போலீசார் ஏற்றிச்சென்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பொது இடங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு கூறிய பின்னரும் 80 பேரும் தகுந்த பாதுகாப்பின்றி 2 லாரிகளிலும் நிற்க கூட இடம் இல்லாமல் ஏற்றிச்சென்றது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் தொழிலாளர்கள் 80 பேரும் கோவை வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.