செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி

Published On 2020-03-23 11:49 GMT   |   Update On 2020-03-23 11:49 GMT
அதிக காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றால் அவதிப்பட்ட மேற்குவங்க வாலிபர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர்:

வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

இவர்கள் வேலூர் மெயின் பஜார், காந்தி ரோடு, ஆற்காடு ரோடு, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ளனர். லாட்ஜூகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

வேலூரில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தங்கியுள்ளனர். அவர்கள் எந்தவிதமான சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என்பது போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் அதிக காய்ச்சல் இருமல் சளி போன்றவை ஏற்பட்டால் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவரும், வாணியம்பாடி ஜெயில் கைதி ஒருவரும் நேற்று கொரோனா அறிகுறியுடன் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு மேற்குவங்க வாலிபர் அதிக காய்ச்சல், இருமல், சளி ஆகியவை இருந்தன. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய ரத்தம், சளி போன்றவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

லாட்ஜூகளில் தங்கி இருப்பவர்கள் காய்ச்சல் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

லாட்ஜூகளில் தினமும் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். வடமாநிலங்களை சேர்ந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News