செய்திகள்
நகை, பணம் கொள்ளை

கணவன்-மனைவியை தாக்கி 25 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2020-03-20 06:37 GMT   |   Update On 2020-03-20 06:37 GMT
ஈரோடு அருகே கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 25 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அருகே உள்ள 60 வேலம்பாளையம், குணாங்காட்டு வலசு, திருக்கல்காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (75) விவசாயி. இவரது மனைவி பருவதம் (70). இவர்களது மகன் பிரகாஷ். இவர் கோவையில் குடும்பத்துடன் தவசித்து வருகிறார்.

துரைசாமி - பருவதம் மட்டும் திருக்கல்காட்டுத் தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் துரைசாமியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளை கும்பல் தூங்கிக்கொண்டிருந்த துரைசாமி மற்றும் அவரது மனைவி பருவதத்தை கட்டையால் தாக்கினர். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.

பின்னர் அவர்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து அவரது மகன் பிரகாசுக்கு கொடுத்த தகவலின் பேரில் கோவையிலிருந்து விரைந்து வந்த அவர் உடனடியாக அரச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் காயமடைந்த விவசாயி துரைசாமி மற்றும் அவரது மனைவி பருவதம் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News