செய்திகள்
கைது செய்யப்பட்ட வெங்கடாசலம்

கொரோனா வதந்தி பரப்பிய மின்வாரிய ஊழியர் கைது

Published On 2020-03-19 03:24 GMT   |   Update On 2020-03-19 03:24 GMT
வாட்ஸ்-அப்பில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதே நேரத்தில் இது சம்பந்தமான வதந்திகளும் சமூக வலைத்தளங்கான வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் பரப்பி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது. இதன் காரணமாக கோழி மற்றும் ஆட்டு இறைச்சி வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பற்றிய சரியான காரணம் தெரியாமல் வீணாக வதந்தியை பரப்பும் நபர்களை கண்டுபிடிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன்பேரில் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வதந்தியை பரப்பும் நபரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட வாட்ஸ்-அப் எண்ணை சைபர் கிரைம் உதவியுடன் தேடி வந்தனர்.

இதில் செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் வதந்தியை பரப்பியவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி நடுப்பட்டி அருகே உள்ள கொங்கம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 30) என்பதும், அவர் நடுப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வீண் வதந்திகளை வாட்ஸ்-அப்பில் பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர். பின்னர் அவர் பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மாஜிஸ்திரேட்டு 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News