ஈரோட்டில் உதவிப் பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு:
ஈரோடு பச்சமாளி அடுத்த சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் ரவி (வயது53). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரவி திருச்செங்கோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். மகனும், மகளும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். ரவி மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரவி சோகத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ரவி எலி மருந்தை (விஷம்) எடுத்துக் குடித்து விட்டார்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். அவர் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.