செய்திகள்
நாகையில் ரூ. 367 கோடியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
நாகை:
நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் 367 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-
11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க, நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த அரசு விவசாயிகளுக்காக பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டெல்டா பகுதிகளை பாதுகாக்காப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சாதனை படைத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 2 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி இல்லை.
நாகை மாவட்டத்தில் 3 மாதங்களில் 4000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாகையில் புதிய துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.