செய்திகள்
கோப்புப்படம்

ஆம்பூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-03-06 17:07 IST   |   Update On 2020-03-06 17:07:00 IST
ஆம்பூர் அருகே இன்று காலை ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அரசு கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு ஊராட்சி பெரிய மலையாம்பட்டு மலையில் அரசு கல்குவாரி இயங்கி வருகிறது.

இந்த மலையை சுற்றி மலையாம்பட்டு, பெரிய மலையாம்பட்டு, சின்ன மலையாம்பட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த அரசு கல்குவாரியில் இரவு நேரங்களில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க படுவதால் அதிலிருந்து சிதறும் பாறைகள் குடியிருப்புகள் மற்றும் பள்ளி கோவில்கள் மீது விழுந்து சேதம் அடைவதாகவும் கால்நடைகள் காயமடைவதாகவும் கூறி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு கல்குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த மாதம் முதல் அரசு கல்குவாரி இயங்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளிடம் கடந்த 24-ந்தேதி கல்குவாரியை தடை செய்யக்கோரி மனு அளித்தனர்.

ஆனால் கல்குவாரி தொடர்ந்து இயங்கி வருகிறது. இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் வெடிகள் வைப்பதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அரசு கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அரசு கல் குவாரியை நிரந்தரமாக மூட கலெக்டர் சிவன்அருள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 10 கிராம மக்கள் சேர்ந்து திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

பொதுமக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News