செய்திகள்
கோப்புப்படம்

5 கல்வி மாவட்டங்களில் 40,531 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர்

Published On 2020-02-28 11:51 GMT   |   Update On 2020-02-28 11:51 GMT
திருப்பத்தூர், வேலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் உள்ள 274 உயர்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ- மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
வேலூர்:

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான முன்னேற்பாடுகளை, கல்வி அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வேலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள 274 உயர்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ- மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 171 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றுபவர்கள்.

தேர்வு மையங்களைக் கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 350 பேர் அடங்கிய பறக்கும் படை நிலையான படை அமைக்கப்பட்டு உள்ளது. அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன. வினாத்தாள்கள் 16 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வளாகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வினாத்தாள்கள் 44 வழித்தடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

தமிழ் பாடத்துக்கான தேர்வு வருகிற 2-ந்தேதி நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிவரை நடைபெறும். தேர்வு மையங்களில் இருந்து முன் கூட்டியே மாணவர்கள் வெளியேறக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் தேர்வு மையத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் தேர்வு மையத்தில் காப்பி அடிக்கவோ, மற்றவர்கள் விடைத்தாளை பார்த்து எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். மீறி தவறாக நடக்க முயன்றால், நிச்சயமாக கண்காணிப்பாளர்களால் கையும், களவுமாகப் படிபடுவதுடன், தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதிட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News