வேலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- விசாரிக்க சென்ற பெற்றோரிடம் பள்ளி நிர்வாகிகள் வாக்குவாதம்
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வயது சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளியின் மதிய உணவு இடைவேளையின்போது சிறுமியிடம் ஒருவர் சென்று மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபரை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.