கேளம்பாக்கம் அருகே கொசுவர்த்தி தீயால் இளம்பெண் பலி
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அருகே உள்ள பனங்காட்டுபாக்கம், எம்.ஜி.ஆர். நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று இரவு சாந்தி கொசு வர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டு தூங்கினார். அப்போது அவரது சேலையில் கொசுவர்த்தி சுருளின் தீ பட்டது. இதில் புடவையில் தீ பற்றியது. உடல் கருகிய சாந்தி அலறி துடித்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளங்கோ மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் உடல் கருகினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இளங்கோ செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.