செய்திகள்
வாணியம்பாடி ஜெயிலில் சிறைக்காவலர் போதையில் ரகளை
வாணியம்பாடி கிளை சிறையில் குடிபோதையில் தள்ளாடியபடி வந்து 2 மணி நேரமாக கைதிகள், பணியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சிறைக் காவலரை சஸ்பெண்ட் செய்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் உத்தரவிட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கிளை சிறை 2-ம் நிலை காவலர் இளஞ்செழியன். இவர் கடந்த 22-ந் தேதி இரவு குடிபோதையில் தள்ளாடியபடியே பணிக்கு வந்தார்.
தொடர்ந்து அங்கிருந்த கைதிகள், கிளை சிறை பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். தட்டிக் கேட்ட சிறை காவலர்களிடமும் தகாத வார்தைகளால் பேசியபடி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறைக்காவலர் இளஞ்செழியன் ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் விசாரணை நடத்தி சிறைக்காவலர் இளஞ்செழியனை சஸ்பெண்டு செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.