வேலூரில் கலெக்டர் காரை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
வேலூர்:
வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டை சேர்ந்தவர் சீனிவாசன், ஜெயலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கடந்த 2003-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.
இந்த நிலத்திற்கு ரூ.42 லட்சம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தொகை போதாது என நிலத்தின் உரிமையாளர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ரூ.5 கோடி வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் இந்த தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வேலூர் கோர்ட்டு அமீனாக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்களை கையகப்படுத்த போவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த 2 கார்களும் அங்கு இல்லை. இதனால் அவர்கள் திரும்பி சென்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில்:- நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய தற்போது 3-வது முறையாக வந்துள்ளோம். ஆனால் இங்குள்ள ஊழியர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். அடுத்த முறை போலீஸ் பாதுகாப்பு கேட்போம். அதற்குப் பிறகு ஜப்தி செய்வோம் என்றனர்.