செய்திகள்
மர்ம காய்ச்சல்

பள்ளிகொண்டாவில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

Published On 2019-10-16 07:56 GMT   |   Update On 2019-10-16 07:56 GMT
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் மர்ம காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 792 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தை சேர்ந்தவர் சரண்மோகன்ராஜ். இவரது மகள் நட்சத்திரா (வயது4). பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

இந்நிலையில் நட்சத்திராவுக்கு கடந்த 11-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

இதனால் பெற்றோர் நட்சத்திராவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. நட்சத்திராவின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர்.

அதில் நட்சத்திரா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News