செய்திகள்
சரணடைந்த வாலிபர் நந்தகுமார்

2 மாணவிகள் மூழ்கி இறந்த சம்பவத்துக்கு நானே காரணம் - சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2019-10-15 12:19 GMT   |   Update On 2019-10-15 12:19 GMT
ஆப்பக்கூடல் அருகே 2 மாணவிகள் மூழ்கி இறந்த சம்பவத்துக்கு நான்தான் காரணம் என சரணடைந்த வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள அத்தாணி பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு பள்ளி மாணவிகளின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை செய்து வந்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.

மாணவிகளை பற்றி விசாரிக்கையில் அந்தியூர் அருகேயுள்ள காந்திநகர்-புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகள் ஓவியா (வயது 14) மற்றும் கழுதைப்பாளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவர் மகள் சுகந்தி (வயது 16) என்பதும் தெரியவந்தது.

இருவரும் அந்தியூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் அந்தியூரைச் சேர்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த பழனிச்சாமி ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் மாணவிகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென மனு அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட எஸ்.பி சக்திகணேசன் உத்தரவின்பேரில் பவானி டிஎஸ்பி சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினர்.

இந்நிலையில் பூனாச்சி பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளியான நந்தகுமார் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மாணவிகளின் இறப்பு சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஒரிச்சேரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளியங்கிரியிடம் சரண் அடைந்தார்.

இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரான வெள்ளியங்கிரி நந்தகுமாரை ஆப்பக்கூடல் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் தொடர்ந்து நந்தகுமாரிடம் விசாரணை நடத்தியதில், அந்தியூரில் உள்ள ஒரு துணிக்கடையில் சுகந்தி விடுமுறை நாட்களில் வேலைக்கு வந்து சென்றதும், அங்கு துணி எடுக்க வந்த நந்தகுமார் சுகந்தியிடம் பேசியதில் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

நாளடைவில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் சுகந்தியையும் இவரின் தோழியான ஓவியாவையும் பைக்கில் கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி அத்தாணி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று பிறகு அருகிலுள்ள அத்தாணி-பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக மூவரும் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், ஆற்றங்கரையில் சுகந்தி மற்றும் ஓவியா இருவரையும் நந்தகுமார் தனது செல்போனில் போட்டோ எடுத்ததாகவும், அதை சுகந்தி தான் வேலை செய்து வந்த கடையில் வேலை செய்யும் நண்பருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

பிறகு மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போது கரையில் வைத்திருந்த நந்தகுமாரின் செல்போன் மணி அடிக்கவே கரைப்பகுதிக்கு வந்து போனில் பேசிய நந்தகுமார் பிறகு ஆற்றில் திரும்ப வந்து பார்க்கும்போது ஓவியா மற்றும் சுகந்தியை காணவில்லை, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்க கூடும் என்று பயந்துபோன நந்தகுமார் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தகவல் சொல்லாமல் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டதாக தெரிகிறது.

அதன் பின்னரே கடந்த ஜனவரி 3-ம் மற்றும் 4-ம் தேதிகளில் ஆற்றில் இரண்டு மாணவிகள் அடுத்தடுத்து சடலங்கமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பே, சில மாதங்கள் கடந்து செல்ல நந்தகுமாரின் செல்போன் தொலைந்து போகவே அதில் மாணவிகள் எடுத்த போட்டோ இருக்கிறதே! போட்டோவை யாராவது பார்த்து விட்டால் தான் மாட்டி விடுவோம் என்ற பயத்தில் நந்தகுமார் சரண் அடைந்து வாக்கு மூலம் கொடுத்து உள்ளார்.

இதனையடுத்து போலீசார் நந்தகுமார் மீது, அபாயகரமான இடத்திற்கு கூட்டி சென்று இளம்பெண்களின் இறப்பிற்கு காரணமாக இருத்தல் மற்றும் தகவல்களை மறைத்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவிகள் இருவர் பெற்றோருக்கு தெரியாமல் வெளிநபரோடு பழகியதால் ஏற்பட்ட துயரம்... கூடா நட்பு கேடாக முடிந்ததையே இச்சம்பவம் உணர்த்துவதாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News