உள்ளூர் செய்திகள்

தோல்வி கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது வருத்தம்- அன்புமணி

Published On 2026-02-20 11:04 IST   |   Update On 2026-02-20 11:04:00 IST
  • வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
  • தமிழகம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளது.

நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற் சங்க பொது செயலாளர் செல்வராசு-ஜெயந்தி மாலா மகள் சரண்யாவிற்கும், சென்னை ஓட்டேரியை சேர்ந்த சுப்பிரமணி-அருணாராணி மகன் ஈஸ்வருக்கும் நெய்வேலியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜயகாந்த் உழைப்பால் உயர்ந்தவர். அவரை மதிக்கிறேன். தமிழ்நாட்டை தி.மு.க. அழிக்கிறது என்ற கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்தவர் விஜயகாந்த்.

அவர் உருவாக்கிய கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தோல்வி அடையும் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து உள்ளது வருத்தமாக இருக்கிறது.

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர்.

தமிழகம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலையிலேயே உள்ளது. மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது கூட கடன் வாங்கித்தான் கொடுத்தார்கள்.

கடன் வாங்கி தமிழ்நாடு திவாலாகி விட்டது. நேரடி கடன் 10 லட்சம் கோடி உள்பட 15 லட்சம் கோடி கடன் வழங்கியது தி.மு.க. ஆட்சி.

தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றததால் துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் வீதியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் கூட்டணிகுள் எந்தவித குழப்பமும் கிைடயாது. தி.மு.க. கூட்டணிக்குள் ஏகப்பட்ட உள் குழப்பம் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News