செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி திருப்பூர் மாணவன் பலி
மயிலாடுதுறை அருகே நடந்து சென்ற மாணவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மயிலாடுதுறை:
திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மகன் சக்தி தர்ஷன் (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே பழைய கூடலூரில் உள்ள உறவினர் பாரி(33) என்பவர் வீட்டுக்கு சக்தி தர்ஷன் வந்திருந்தார்.
நேற்று மாலை மயிலாடுதுறை மகாத்மா காந்தி சிலை அருகே ரோட்டில் சக்தி தர்ஷன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்த ராமநாதன், மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சென்று மாணவன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்தி தர்ஷனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி தர்ஷன் பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.