வீட்டு காம்பவுண்டு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குருமணி (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டு அருகே அவர் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குருமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் குருமணி இறந்ததையொட்டி அவர் பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தினர்.