செய்திகள்
சாலை மறியல்

ஜெயங்கொண்டம்- ஆலங்குடியில் இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

Published On 2019-07-31 20:03 IST   |   Update On 2019-07-31 20:03:00 IST
ஜெயங்கொண்டம் மற்றும் ஆலங்குடியில் இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த உதய நத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18ம் ஆண்டு பிளஸ்2 படித்து முடித்த 69 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சிலால் அணைக்கரை சாலையில் அமர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா விரைந்துசென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து எடுத்துரைத்து  விரைவில் உங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட முன்னாள் மாணவர்கள்  போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிலால் அணைக்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைப்போல் புதுக்கோட்டை ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில்2017-18ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்தும் உடனடியாக மடிக் கணினியை வழங்க கோரியும்,  முன்னாள் மாணவிகள் கொத்தமங்கலம் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தும் உதவி  தலைமையாசிரியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் மடிக்கணினி  வழங்கப்படும் என்று உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

Similar News