செய்திகள்
மரணம்

பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி

Published On 2019-07-20 11:12 GMT   |   Update On 2019-07-20 11:12 GMT
பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை:

மணல்மேடு களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஜெயராமன் (வயது 55). இவர் பந்தநல்லூர் அருகே நெய்வாசல் கிராமத்தில் கடையை வாடகைக்கு பிடித்து வெல்டிங் பட்டறை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது கடையில் மின்சாரம் இல்லாததால் அருகில் உள்ள மற்றொரு கடையில் தனது வெல்டிங் பொருட்களை வைத்து சென்றார்.

சம்பவத்தன்று வெல்டிங் பொருட்களை எடுப்பதற்காக ஜெயராமன் சென்றுள்ளார். அப்போது இரும்பு ‌ஷட்டரை திறக்கும் போது மின் கசிவின் காரணமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயக்க மடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் ஜெயராமனின் இறப்பு சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு ஜெயராமன் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வந்தபோது அப்பகுதி கிராம மக்கள் மின்சாரம் பாய்ந்து இறந்து போன ஜெயராமனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சந்தேக மரணத்தை, விபத்து மரணமாக போலீசார் மாற்ற வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News