செய்திகள்
விபத்து

வேதாரண்யம் அருகே விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட 2 பேர் பலி

Published On 2019-07-19 10:52 GMT   |   Update On 2019-07-19 10:52 GMT
வேதாரண்யம் அருகே நடந்த சாலை விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் குமார் (வயது 40), டிராக்டர் டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த கபில் (26) என்பவரும் கடந்த 6-ந் தேதி டிராக்டரில் சென்றனர். குமார் டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது காற்று பலமாக வீசியதால் டிராக்டர் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த குமார் மீது டிப்பர் ஏறியது. இதில் அவர் படுகாயமடைந்தார். கபில் லேசான காயத்துடன் தப்பினார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குமாரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வேதாரண்யத்தை அடுத்த கரியாபட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார் (வயது 39). இவர் தனியார் உப்பு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள சோமநாதர் கோவிலடி என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News