செய்திகள்
விபத்து

வேதாரண்யத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

Published On 2019-07-12 11:33 GMT   |   Update On 2019-07-12 11:33 GMT
வேதாரண்யத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ரவி மகன் ராகுல் (வயது17), தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் மகன் காளிதாஸ் (17), வண்டல் பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் ராஜ் (17). இவர்கள் 3 பேரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று திருவாரூரிலிருந்து வேதாரண்யத்துக்கு சென்ற தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். வேதாரண்யம் வள்ளியம்மை சாலை அருகே பக்க வாட்டில் நின்ற டிராக்டரை பஸ் முந்தி செல்ல முயன்றபோது படியில் நின்ற ராகுல், காளிதாஸ், ராஜ் ஆகிய 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். காளிதாஸ் மற்றும் ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியான ராகுல் உடலை வேதாரண்யம் போலீசார் கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News